.comment-link {margin-left:.6em;}

வலைப்பூவும் வைத்த விதம்

மதுமிதா என்பவர் மேற்கொள்ளும் ஆய்விற்
குதவிட நானும் உரைத்தேன் - ஓதக்
கலைமடந்தை வாழ்த்தின்றிக் கல்லாத நானும்
வலைப்பூவும் வைத்த விதம்.

வலைப்பதிவர் பெயர்:
வில்லை வளவனென்பர் வேண்டியவர் வேண்டாதார்
தொல்லைத் தருவனென்பர் தற்காலத் – தொல்லைப்
பயலென்பர் நண்பர் புலவீர் ஃபுளோரைப்
புயலென்பர் மற்றும் பலர்.

வலைப்பூ பெயர் :
வள்ளுவம் நாலடியார் வாகானக் கம்பனும்
தெள்ளிய பாடல் திரட்டெனலாம் - துள்ளிவரும்
என்பாட்டை என்சொல்ல ஏலும் எளிதாக
என்பாக்கள் என்றே இயம்பு.

சுட்டி( url) : http://enpakkal.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: நாடு:
தேடாமல் செல்வம் தருகின்ற நல்லதோர்
நாடாம் அமெரிக்க நாடிதுவே - நாடின்
கடல்தனைக் காணாமற் குன்றிலே யுள்ள
அடலை நகரென் றறி.

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
தேடும் பொருளுடனே தந்திடுவார் நாளும்நாம்
நாடும் முடிவுகளை நல்கிடுவார் - ஏடுதனில்
ஏகிடும் எப்பொருளும் எப்போதும் நல்கிடும்
கூகிளார் எந்தன் குரு.

முதல் பதிவு ஆரம்பித்த நாள் ,வருடம் : 07/21/2005

இது எத்தனையாவது பதிவு: 7

இப்பதிவின் சுட்டி( url): http://enpakkal.blogspot.com/2006_06_01_enpakkal_archive.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
சுனைபோலே என்னுள் சுரக்கின்ற பாக்கள்
வினையால் மறந்து விலக - நினைவு
தொலைப்பதை என்றும் தவிர்த்திடவே நானும்
வலைப்பூவும் வைத்த விதம்.

சந்தித்த அனுபவங்கள்:
தமிழென்றார் எல்லாம் தவறென்றார் குப்பைக்
குமிழென்றார் இன்னும் குறும்பாய் – உமிழ்ந்தார்
தெளியென்றார் உண்மைத் தெரியென்றார் வாகாய்
அளியென்றார் அன்பர் அறிந்து.

பெற்ற நண்பர்கள்:
சித்தம் தெளியாது சிந்தனைச் செய்திடா
தெத்தாலும் கூடி இருக்காதே - இத்தகையப்
பண்புடைய பைந்தமிழ்ப் பித்தன்தன் வாழ்விலே
நண்பரு மேது நவில்.

கற்றவை:
கற்றது கைம்மண்ணளவு கல்லாத துலகளவவென்
றுற்ற கலைமடந்தை யோதுவதாய் – கற்றதோர்
மூதாட்டி சொன்னாள் முடியா ததைமறுக்க
ஏதானும் சொல்லாலே யிங்கு.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
எண்ணு மெதையு மெழுதலாம் ஏதையும்
திண்ணமாய்ப் பேசித் திளைக்கலாம் – மண்ணிலே
நன்மையும் தீமையும் நல்கிடும் ஓர்பெரும்
வன்மை உடைத்தே வலை.

இனி செய்ய நினைப்பவை:
தன்னலம் போற்றித் தமிழரை யேய்ப்பவர்
அன்னாரின் எச்ச மறுத்திடப் - பின்னேப்
புறம்பேசு வோரைப் பழிக்கத் தமிழ்கற்
றறம்பாட வேண்டும் இனி.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
நாலிரண்டு சொன்னவனோ நச்சரவம் பூண்டவனை
நூலிலே வைத்ததொரு நாயனனோ - வேல்கொண்டு
வல்லவரை வீழ்த்தும் வளவனோ என்சொல்ல
புல்லொத்த நாயேன் புகழ்.

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org